Wednesday, November 16, 2005

நங்கூரம். (1)

அந்த புகை வண்டியில்
நட்பாய் ஓர் கரம்.

என் பிரயாண சுமைகளை இறக்கி
என் குழந்தையையும்
தன் மடியில் வைத்துக்கொண்டான்.

அருகில் சிரித்த முகத்துடன்
அவன் மனைவி.

எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு
தன்னை அறிமுகப்படுத்தாமல்.

நான் எனக்குள்
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!
நன்கு பரீட்சயமானதாய் !
யார் இவன்?
நிறைய உரு மாறி இருப்பானோ?

என்னை நன்கு தெரிந்தவனாய்
எல்லாம் விசாரித்தான்.

மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்?

ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.

அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப்பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற

அயல்வீட்டு சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.

இவனுக்கு மண்ணில்
சோறு கறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்.


நளாயினி தாமரைச்செல்வன்.

5 comments:

  1. நளாயினி, கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. நல்ல கவிதை!
    கற்பனையாக நீங்கள் படைத்திட்டாலும்,
    அதை ஏற்க மணம் மறுக்கிறது
    இது போன்ற விளையாட்டு
    தினம் கண்டதாய் ஞாபகம்.

    ReplyDelete
  3. அப்படி விளையாடியதைத்தான் எழுதினேன். வெளிகண்ட நாதர்நன்றி . நன்றி றங்கா.

    ReplyDelete
  4. Anonymous12:09 am

    வாழ்த்துக்கள்



    யாழ்கள சின்னப்பு

    ReplyDelete
  5. hai senappu.. nalamaa erukereenkalaa? sukankal eppade? naankal nalam.

    ReplyDelete