Monday, June 04, 2007

முகம் தொலைத்தவர்....



மணல் வீடு கட்டி

மகிழ்ந்த அந்த நாட்கள்.

சின்னம் சிறுவராய்

சிந்திய புன்னகைப் பொழுதுகள்.



மண்டியிட்டே மடமையை

வளர்த்துக் கொண்ட பெண்.



பருவம் எய்ததும்-தன்னை

விலங்கிட்டே பூட்டிய பெண்.



உயர் கல்வியால்-தன்னை

நிலை நிறுத்தாத பெண்.



சீதணம் கேட்டு வந்த வரனிடம்

சினந்தெழாது


கை கட்டி

வாய் பொத்தி

தலை குனிந்து

தாலி ஏற்ற பெண்.



சினிமாவே வாழ்வென நினைத்து

சிந்திக்க மறந்து தன்னை

கதாநாயகியாக நினைக்கும்

ஏமாளிப் பெண்.



வீட்டினுள் கொலுவிருக்கும்

பொம்மை போல்

ஆணிடம் அடிமையாகும் பெண்.



சிரித்து மழுப்பி-தன்

பிழையை மறைக்கும்

ஆணிடம் கையேந்தி

அவன் கொடுக்கும்

புடவைக்கும் நகைக்குமாய்

அவன் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பெண்.



இன்று வரை தன்னை உணராது

ஜடமாய் வாழும் பெண்.


இவர்கள் எல்லாம்

என் கணிப்பில்

முகம் தொலைத்தவராய்.



இதை எழுதிய பேனா கூட

உயிர் உள்ளது

உணர்வுள்ளது

தீப்பெறி சுமந்தது

மை கூட ஜடமல்ல.



இப் பேனா கூட

ஒருபோதும் முகம் தொலையா.

மீண்டும் மீண்டும் தலைநிமிரும்.

குனிந்த தலைகளை நிமிரச்செய்யும்

தொலைத்த முகங்களை தேடவும் செய்யும்.



பெண்ணாகப் பிறந்ததனால்

பேருவகை கொள்கிறேன்.

தொலைந்து போன முகங்களுள்

தொலையாத முகமாய்-என்

முகமும் என

தலை நிமிர்த்திக் கொள்கிறேன்.

_______

ஆக்கம்-நளாயினி தாமரைச்செல்வன்.





2 comments:

யோசிப்பவர் said...

கருத்து நன்றாயிருக்கிறது.

நளாயினி said...

00. nanre.