Thursday, December 22, 2005

பிரசவம்...!


உயிரை சாவின் எல்லைக்கு
எடுத்துச்செல்லும்
அந்த வயிற்று வலியில்
எமக்கு என்ன தெரியும் .
வைத்தியர் சொல்வதையே
கிரகிக்க முடியாத நிலை.
நா வரண்டு போகும்
தொண்டை கட்டும்.
மசில்சுகள் வலி எடுக்கும்.
யாரோ கழுத்தை பிடித்தே
அமுக்கும் நிலையாக இருக்கும்.
கட்டிலால் எழும்பி
ஓட முயல தோன்றும்.
மலம் கழிக்க வேண்டும்
என்ற உணர்வு தோன்றும்.
வார்த்தைப்பகிர்தலுக்கே
அங்கு இடமில்லை.
ஏலுமானால் கைப்பாசை
சில சமயம் ஒத்துழைக்கும்.
மூச்சே வர மறுக்கும்
ஒரு சின்ன வினாடிக்குள்
மூச்சு மீண்டும் வரும்
ஆனாலும் களைத்த களைப்பில்
மூச்சு மீண்டும் அறுந்தே போகும்
மீண்டும் சில அறுபட்ட
வினாடித் துளியில் தம்மடக்கி
மூச்செடுக்க முயல்வோம்.
முடியவே முடியாது.
அருகில் நிற்கும் க
ணவரை எட்டிப்பிடித்தால்
சில சமயம் மூச்சு வந்து விடுமோ
என மனசு சொல்ல
தம்மடக்கி கை எட்டிப்போகும்
மீண்டும் சோர்ந்து விடும் கைகள்.
மீண்டும் கைப்பாசை கை தாவும்
தண்ணி என பெருவில் கொண்டு
வாயருகில் போகுமுன்
மூர்ச்சையாகும் தருணம்
மீண்டும் வந்துவிடும்.
கைப்பாசையும் மூர்சையாகும்
மயக்கம் வந்து வந்து போகும்
இறுதிக்கட்டத்தில்
முற்றுமுழுதாக மூர்ச்சையாகி விடுவோம்.
உயிர் இருக்கும்
உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு
இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வளையும்.
கண் சொருகும்.
அப்பப்போ விழித்துப்
பார்க்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து துவண்டு
அதை எடுத்துரைக்க வார்த்தைகள்
என்னிடம் இல்லை.
குழந்தை வருவதை
கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக
சேர்த்து வைத்திருந்த
மிச்ச தைரியத்தையும்
பிய்ந்த உயிரையும்
ஒன்றாய்த்திரட்டி
வில்லாய் வளைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.
குழந்தை அழும் சத்தம் மட்டும்
எம் செவி வழி பாயும்.

நளாயினி தாமரைச்செல்வன்.
2002

5 comments:

பூங்குழலி said...

கவிதைக்கு நன்றி நளாயினி அவர்களே.

இதைப்படித்து என் மனதில் பட்டவைகள் இதோ.

நளாயினி said...

நன்றி பூங்குழலி. தங்கடை வலைப்பூவை இப்போதான் பாற்கிறேன். எனது வலைப்பூவிற்கான வருகைக்கு தங்களிற்கு மிக்க நன்றி. தொடர்ந்து தங்களின் எழுத்து வீரியம் மிக்கதாக தொடரட்டும்.

Anonymous said...

பாராட்டுக்கள்...
நளாயினி

தமிழ்நதி said...

பிரசவம் என்பது புனர்ஜென்மத்திற்கு ஈடானது என்பதை உங்கள் கவிதையில் உணர்த்தியிருக்கிறீர்கள். வாசிக்கும்போதே வலித்தது.

நளாயினி said...

வருகைக்கும் கருத்துப்பகிர்தலுக்கும் நன்றி தமிழ்நதி.