Wednesday, December 28, 2005

விடியலை நேரம் உணர்த்தினாலும்....

விடியலை நேரம் உணர்த்தினாலும்
பனிதூறும் காலத்தில்
சூரியன் வருவதில்லை.

வழமையான உடல் நிறையை விட
ஆறு ஏழு கிலோவால்
என் நிறை உடை வடிவில்
என்னைத் துரத்தும்.
தொட்டிலுக்குள் பார்த்தால்
எட்டு மாத செல்ல மகள்
கையால் முகம் போர்த்து
பஞ்சுக்குஞ்சாய் துயிலும் அழகு.

வெளியில் இறங்கும் போது
நற நற என என் காலடியில் உடையும்
பனிக்கண்ணாடித்துண்டங்கள் போல் என் மனசு .

கால்கள் நடுவீதியில் நடக்கும் போது
பூப்பூவாய் தேங்காய்ப்பூ பனித் தூவல்கள்.
தொட்டுப்பார்த்தால்

வாய் நீர் வடித்துக்கொண்டே
தள்ளுவண்டிக்குள் உறங்கும்
குழந்தையின் கன்னத்தின் மென்மை.

சிரித்து நின்ற மரங்கள் எல்லாம்
என் உணர்வைப்போல்
மரத்துத்தான் கிடக்கிறது .
விழியை மறைக்கும்

உப்பு நீரைப்போல்
மரங்களின் கிளை இலைகளை
மறைக்கும் பனித்துளிகள் .

யாரும் ஆறதல் கூறிவிட்டால்
உடைந்து விழுந்து கன்னக்கதுப்பை
ஈரமாக்க துடிக்கும்
உவர்ப்பு நீரைப்போல்
மரக்கிளைகளிலும்
கட்டிட கூரைகளிலும் தொங்கும்
பனிக்கண்டாடிக் கூர்முனைகள்.

ஊசியாய் குளிர் என்னைத்தாக்க
போரில் கண்முன்னே
தாயை இழந்த
குழந்தையின் படபடப்புப்போல்
என் உடல் மெல்ல நடுங்கும்.

மெல்ல அணைத்து
ஓசையின்றி முத்தமிட்டு
காப்பக காறியிடம்
குழந்தையை கொடுத்துவிட்டு
உணவு விடுதியில்
வேலையில் மூழ்கிற போது
நெருப்பு ,கொதி எண்ணெய் எல்லாமே
என் உடல் மேல் பட்ட வேதனை.

இறைச்சி மீன் வெட்டும்
கூரிய கத்தி கொண்டு
என் உடலை யாரோ
அறுப்பது போன்ற உணர்வு
பீறும் இரத்தமாய்
என் உணர்வுகள் எல்லாம்
என்னை கொன்று தின்னும்.
ரணப்படும் என் மனசு.

சொல்லமுடியாத துயரம்
என்னை அப்பும்.
ஓ என் செல்ல மகள்

என்னைத்தேடுவாளோ?

உடலில் உள்ள
உரோமம் எல்லாம் சேர்ந்து
ஒருவித சிலிர்ப்பைத்தந்து
விழிவழியே உப்பு நீரை வரவழைக்கும்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Saturday, December 24, 2005

முதன் முதல்.!

"அம்மா..!! முதன் முதல் கை ஒண்டை விட்டிட்டு நிக்கிறன். நீங்க ஓகே சொன்னாத்தான் நான் கையாலை கதிரையை பிடிப்பன். ஓகேயா?"

Friday, December 23, 2005

"ஸ்ஸ்ஸ் ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். ரகசியம் ஒண்டு"

"விழுழுறன் விழுழுறன்" "ஆஆஆ ..! அட்ட்டிடி விழுழும்ம்."


நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

அம்மான்ரை குரல் மட்டும் கேக்குது. ஆனா அம்மாவை காணம்!!!!

Thursday, December 22, 2005

கட்ட்ட்டிப் பிடிச்சு முத்த்தமொண்டு வச்சு....


செல்லக் கருவிழியான்.

பிரசவம்...!


உயிரை சாவின் எல்லைக்கு
எடுத்துச்செல்லும்
அந்த வயிற்று வலியில்
எமக்கு என்ன தெரியும் .
வைத்தியர் சொல்வதையே
கிரகிக்க முடியாத நிலை.
நா வரண்டு போகும்
தொண்டை கட்டும்.
மசில்சுகள் வலி எடுக்கும்.
யாரோ கழுத்தை பிடித்தே
அமுக்கும் நிலையாக இருக்கும்.
கட்டிலால் எழும்பி
ஓட முயல தோன்றும்.
மலம் கழிக்க வேண்டும்
என்ற உணர்வு தோன்றும்.
வார்த்தைப்பகிர்தலுக்கே
அங்கு இடமில்லை.
ஏலுமானால் கைப்பாசை
சில சமயம் ஒத்துழைக்கும்.
மூச்சே வர மறுக்கும்
ஒரு சின்ன வினாடிக்குள்
மூச்சு மீண்டும் வரும்
ஆனாலும் களைத்த களைப்பில்
மூச்சு மீண்டும் அறுந்தே போகும்
மீண்டும் சில அறுபட்ட
வினாடித் துளியில் தம்மடக்கி
மூச்செடுக்க முயல்வோம்.
முடியவே முடியாது.
அருகில் நிற்கும் க
ணவரை எட்டிப்பிடித்தால்
சில சமயம் மூச்சு வந்து விடுமோ
என மனசு சொல்ல
தம்மடக்கி கை எட்டிப்போகும்
மீண்டும் சோர்ந்து விடும் கைகள்.
மீண்டும் கைப்பாசை கை தாவும்
தண்ணி என பெருவில் கொண்டு
வாயருகில் போகுமுன்
மூர்ச்சையாகும் தருணம்
மீண்டும் வந்துவிடும்.
கைப்பாசையும் மூர்சையாகும்
மயக்கம் வந்து வந்து போகும்
இறுதிக்கட்டத்தில்
முற்றுமுழுதாக மூர்ச்சையாகி விடுவோம்.
உயிர் இருக்கும்
உணர்வு இருக்கும்
அப்பப்போ வயிறு
இறுகி இறுகி
உடல் பின்பக்கமாக வளையும்.
கண் சொருகும்.
அப்பப்போ விழித்துப்
பார்க்க தோன்றும்.
ஆனாலும் முடிவதில்லை.
கத்த முடிவதில்லை
அசைய முடிவதில்லை.
உடலோ சோர்ந்து துவண்டு
அதை எடுத்துரைக்க வார்த்தைகள்
என்னிடம் இல்லை.
குழந்தை வருவதை
கருவிகள் காட்ட
அவசரம் அவசரம்
எல்லோரிலும் அவசரம்
இறுதியாக
சேர்த்து வைத்திருந்த
மிச்ச தைரியத்தையும்
பிய்ந்த உயிரையும்
ஒன்றாய்த்திரட்டி
வில்லாய் வளைய
குழந்தை மெதுமெதுவாக
தாதி கை தாவும்.
குழந்தை அழும் சத்தம் மட்டும்
எம் செவி வழி பாயும்.

நளாயினி தாமரைச்செல்வன்.
2002

Saturday, November 26, 2005

உயிர்த்தீ......5

சில சமயம்
மணிக்கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
எதையும்
அனுமானித்து விட
முடிவதில்லை
இந்த
பனிப்புகார்
காலத்தில்.

பகலா? இரவா?
சற்று குழப்பம் தான்.

ஆனாலும் இப்போ என்னால்
மணிக் கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
சகலதையும்
அனுமானிக்க முடிவதோடு
அத்தனை அழகையும்
ரசிக்கவும் முடிகிறதே..!!

எத்தனை அழகாய்
வெள்ளை மலைத்தொடர்களும்.
அதற் கூடே ஒளிரும்
வெண்மையும்
அந்த ஒளித்தெறிப்பின்
யவ்வனமும்.

வெறும் உடம்போடு
பனிக்கால சுகத்தை
அனுவணுவாய்
ரசித்து கிறங்கி போயிருக்கும்
இயற்கையும்..

ஒரு மரக்கிளையில்
குளிரில் நடங்கியபடி
எங்கோ பார்த்திருக்கும்
ஒற்றைக் குருவி.

பாவம்..!!
இதற்கும்
தலைசாய்து கொள்ள
ஒரு மடி கிடைத்து விட்டால்
என்னைப்போல இத்தனை அழகையும்
இன்பமாய் ரசிக்குமோ.?

நளாயினி தாமரைச்செல்வன்.

Friday, November 25, 2005

அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.



சர்வதேச பெண்கள் வேலை சுகாதாரம் தொடர்பான நான்காவது சர்வதேச கருத்தரங்கில் பங்கு பற்றச்செல்லும் கவிiஐ வைகைச்செல்விக்கு உலகபெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் தத்தமது நாட்டில் இருந்து துன்புறும் பெண்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

அவரின் குரல் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப்பட்ட, பூகம்ப அதிர்வுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த பெண்கள் குரலாய் ஒலிக்கட்டும் . இலங்கைத் தீவின் அழுகுரலுக்கு நம்பிக்கை தருவார் என நம்புவோம். அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.

எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.

Wednesday, November 23, 2005

புத்தகத்தொகுதிகளிற்கான என்னுரை.

நங்கூரம் கவிதைத்தொகுதி பலவகையான காதலை சொல்லிச்செல்கிறது. காதல் மொழிகள் கூட ஆண்களுக்கே உரியதாக . அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக. அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம்.

அதில் ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக்காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்த நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல், எனது கணவரை எப்படி காதலித்தேன் என்பதனைக் கூட எழுதி இருக்கிறேன். இப்படியாக விரிகிறது நங்கூரம்.

ஒவ்வொருவரது காதல் மனநிலையையும் தமிழ்க்கயிறேறி கட்டி இழுத்து வந்து கவிதையாக்கி உள்ளேன் .

மொத்தம் 31 கவிதைகள் அதில் உள்ளன. இந்த புலம்பெயர்வாழ்வும் அதிக வேலைப்பழுவும் தனிமையும் என்னை நங்கூரத்தின் தொடர்ச்சியாக உயிர்த்தீ என்பதை எழுதிமுடித்தேன். அதன் நீட்சியாக பூக்கள் பேசிக்கொண்டால் அமைகிறது. அதன் நீட்சியாக உயிர்கொண்டு திளைத்தல் அமைகிறது.

முதலில் நங்கூரத்தையும் உயிர்த்தீயையும் கொண்டு வந்த பின் பூக்கள் பேசினால் என்ற தலைப்பை கொண்டு வரலாம் என நினைக்கிறேன். அதன் பின் உயிர்கொண்டு திளைத்தல் கவித்தொகுதியாகும்.

கவிஉலகுள் நான் பிரவேசித்தது எனது பதினேழு பதினெட்டு வயதில் என நினைக்கிறேன். போராட்ட சூழலும் இடப்பெயர்வும் பதுங்குகுளிவாழ்வும் எனது எழுத்தை தொடரவிடவில்லை.

புலம்பெயர்ந்த பின் எனது கணவரின் ஊக்கமும் எனது தாய்தந்தையரின் ஊக்கமும் எழுதவைத்தது எனலாம்.

பின்னர் வானொலிகள் தொடங்கிய காலம் எனது எழுத்து அதிக உத்வேகமானது என கூறலாம். புலம்பெயர் சகல தமிழ்வானொலிகளிலும் எனது கவிதைகளை பாடி இருக்கிறேன்.

எனது கவிதைகள் யாழ் இணையத்தளம், திண்ணை, திசைகள், பதிவுகள், வார்ப்பு, தமிழமுதம், தமிழ் மன்றம்; ஊடறு,சூரியன் இணையத்தளம் ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.

பதிவேடுகள் என பார்த்தால் சக்தி, ஈழநாடு, வடலி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், அவள் விகடன், பூவரசு ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.

எனது கவிதைகளை வாசித்து அப்பப்போ உற்சாகமும் நிறைகுறைகளை பகிர்ந்து கொண்ட வாசக உள்ளங்களுமே என்னை மேலும் எழுதவைத்தனர் எனலாம். புத்தகத்தொகுதிகள் உங்கள் கை கிடைத்ததும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை தந்துதவுங்கள்.

என்றும் எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.

Tuesday, November 22, 2005

நங்கூரம் ;உயிர்த்தீ ஆகிய கவிதைத்தொகுதி வெளியீடு.

தைத்திங்கள் 2006 ல் எனது கவிதைத் தொகுப்பான நங்கூரம்;, உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. புதுவை இரத்தின துரை அவர்கள் வந்த போது புலம்பெயர் புத்தகங்கள் தமது கைக்கு கிடைப்பதில்லை என கூறியபோது பலரது புத்தகங்களை எடுத்து கொடுத்திருந்தேன். அந்த வகையில் சில புத்தகங்களை சேர்த்துக் கொடுத்திருந்தேன். அந்த வகையில் கருணாகரமூர்த்தி எனக்கு எழுத்துலகத்தோடு பழக்கமானார். திரு கருணாகர மூர்த்தி மனுஸ்யபுத்திரனை போன ஆண்டு மின்னஞ்சலுக்கூடாக அறிமுகம் செய்து வைத்தார். போன ஆண்டே வரவேண்டிய புத்தகம் எனது வேலைப்பழுக்களால் வெளியாகாமல் போய் விட்டது. இப்போது ஆயத்தங்கள் மனுஸ்யபுத்திரனால் நடைபெற்றுவருகிறது. வருகிற ஆண்டு தை மாதம் புத்தக கண்காட்சியில் எனது கவிதைத்தொகுதிகள் இரண்டு வர உள்ளதை மகிழ்வுடன் எழுத்தலக நெஞ்சங்களிற்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஓவியர் ஐPவன் அவர்களது அட்டப்படத்துடன்.

எழுத்தலக நட்புடன்
நளாயினி தாமரைச்சென்வன்.

Monday, November 21, 2005

நங்கூரம்.(2)

நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
______________________________________________

சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம்.?

உணர்வில் உயிரில்
கலந்த பின்
பிரிந்தோம் என்பது
வேதனை தான்.

மரணித்து
காதலை வளர்ப்போம்
என்றோம்.

எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
வாழ்ந்து கொண்டே
நினைவுகளில் வாழ்வோம்
என்கின்றனர்.

நீ தந்த சின்னச்சின்ன
பரிசுப்பொருளெல்லாம்
இன்றும் என்
தலை அணையின் கீழ்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

உன்னை எல்லாம் இப்போ என்
தொலை பேசி விசாரிக்கத்தவறுவதில்லை.
நமக்கு வயதாவது போல்
சமூக வெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது.

சமூகம் திருந்தாது.
நாம் தான் மாற வேண்டும்.
காலம் போகிறது வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய்
மாலை மாற்றுவோம்.

என் நாடி அடங்கு முன்
உனை ஒரு முறை
பார்த்திட வேண்டும்.
எங்கே இருக்கிறாய்.?

நட்பாய்
எனக்கொரு
நகல் எழுதேன்.

Friday, November 18, 2005

உயிர்த்தீ......4

நீர்த்தடாகத்துள்
விழும் மழைத்துளியாய்
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன்.

சின்ன சின்ன
குமிழ்களாய்
தோன்றுவதும்
மறைவதுமாய்--

இப்படித்தான்
உன் நினைவுகள்
எனக்குள் இப்போ.

கண் மூடி கிறங்கி
சலசலப்பை உணர
சுகமாகத்தான் உள்ளது.

குமிழ்கள் உடையும்போது
ஏற்படும் நீர்ச்சலனம்
மெது மெதுவாக
எங்கும் வியாபித்து
தடாகத்துள் அலை போன்ற
அசைவைத்தருவது போல்
உயிரின் அந்தம் வரை நீயும்
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.

Wednesday, November 16, 2005

நங்கூரம். (1)

அந்த புகை வண்டியில்
நட்பாய் ஓர் கரம்.

என் பிரயாண சுமைகளை இறக்கி
என் குழந்தையையும்
தன் மடியில் வைத்துக்கொண்டான்.

அருகில் சிரித்த முகத்துடன்
அவன் மனைவி.

எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு
தன்னை அறிமுகப்படுத்தாமல்.

நான் எனக்குள்
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!
நன்கு பரீட்சயமானதாய் !
யார் இவன்?
நிறைய உரு மாறி இருப்பானோ?

என்னை நன்கு தெரிந்தவனாய்
எல்லாம் விசாரித்தான்.

மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்?

ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.

அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப்பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற

அயல்வீட்டு சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.

இவனுக்கு மண்ணில்
சோறு கறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்.


நளாயினி தாமரைச்செல்வன்.

Sunday, November 06, 2005
















மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Friday, November 04, 2005

தேசியப் பண் எனது பார்வை.

சொல்லிக் கருக்கட்டவதில்லை கவிதை. அணுவணுவாக மனசு வதைத்து, பிழிந்து, உய்த்து, தொலைந்து, உயிர்த்து, கனத்து, உயிர்த்து, ததும்பி, வழிந்து, ஓடுவது தான் கவிதை.

அதுகும் இங்கே மிடுக்கோடு துள்ளல் நடையோடு உயர் விச்சோடு என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். கவிதை வரும் அத்தனை தன்மைகளோடு நாம் இது வரை அனுபவித்து எழுதி இராத வெற்றி வாகை இதுவரை சொல்லப்பட்டிராத மீடுக்குடன் என நான் நினைக்கிறேன் வீர ஆவேசம் பொங்கிய மகிழ்வை கூறும் கவிதையாக வரல் வேண்டுமென. அதை நினைத்ததும் எழுத முடியாது.

மிடுக்குடன் துள்ளல் நடையுடன் உயர் வீச்சுடன் என கூறுகிறபோது புலம்பெயர் மண்ணில் வாழும் என்னால் காத்தவராயன் கூத்தம் சூரன் போருமே மனக்கண் முன் வருகிறது.

அத்தனை போராட்டங்களிலும் அருகே இருந்தவர்களால் மட்டுமே இந்த பண்ணை உருவாக்க முடியும்.

நொந்து வெந்து வீழ்ந்து துவண்டு துடித்து அழுது புலம்பி அரற்றி ஆசவாசமாய் சமாதானமாகி இனியும் நாம் வீழ்ந்து போகக் கூடாது என நினைத்து திடீர் என எழும்பி மிடுக்குடன் துள்ளல் நடையுடன் வீர ஆவேசம் பொங்க நின்ற அனுபவம் உடையவர்களால் மட்டுமே துள்ளல் நடையுடன் வீறுகொண்ட உயர் வீச்சுடன் எழுதமுடியும். அது தான் உண்மை.

அத்தகைய தன்மை அனைத்து போராட்டங்களின் வெற்றி தோல்வி மரண ஓலம் ஒப்பாரி இவற்றிற்கு அருகிலிருந்தவர்களாலேயே எழுதமுடியும்.

எனது பார்வை முடிந்த முடிபல்ல.புலம்பெயர் தமிழர் யாராவது எழுதினாலும் எழுதிவிடலாம்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Wednesday, November 02, 2005

உயிர்த்தீ......3

மனசு
அதெப்படி இருக்கும்?!
ஆராய்ச்சி ஏதும்
இதுவரை செய்ததில்லை.

ஆனாலும் நான்
ஒரு போதுமே
அதை எடுத்து
தொட்டுப் பார்த்ததுமில்லை
உணர்ந்து
படித்ததுமில்லை.

எங்காவது தன்னை மறைத்தபடி
இந்த உடம்புள்
எந்த இடுக்குகளுக்குள்
இதுவரை இருந்திருக்கும்.!!!

இப்போதாவது
கண்டெடுத்தேனே!!

காமக்கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையம்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி.

நட்பா..!? காதலா..!?
பிரித்துப்பார்க்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டும்.

இப்போவதாவது கண்டு பிடித்தேனே
எந்தன் மனைசை உந்தன் நினைவுகளோடு.

நளாயினி தாமரைச்செல்வன்.

Thursday, October 27, 2005


அன்பைப் பெருக்கு.
ஆழ விதை.
ஆதாயம் வேண்டாம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Tuesday, October 25, 2005

உயிர்த்தீ......2

கானல் நீரா?!
காவியமா?!
கடுகதியாய் போகும்
எண்ண ஓட்டமா?!
நினைவுகளுக்கு
சக்கரம் பூட்டிய வேகமா..`!
குழந்தைத்தனத்துள்
தெரியும் குதூகலமா....?!
இதுவரை யாருமே
வெளிக்காட்டாத
உயரிய சிந்தனையா..?
யாருமே அனுபவித்திராத
இன்ப ஊற்றா?!

என்னவென்றே
இனம் காணமுடியாத
ஒரு தளுவல் !!
காற்றில் பறக்கும் அனுபவம்
மலையின் உச்சியை
தொட்டுவிட்ட அனுபவம்
யாரும் அருகில் இருப்பதை கூட
மறந்த நிலை:

இவை எல்லாம்
சின்னத்தனமாய்
தெரியவில்லை.
ஆனாலும்
சமூகத்திற்கு பயந்த
சாபக்கேடாய்
மனதுள் தொட்டுவிட்ட
தொட்டாச்சினுங்கியாய்
தன்னை மறைத்துத்தான் கொள்கிறது.

அப்பப்போ தன்னை இனம் காட்டும்
அந்த தொட்டாச்சினுங்கிக்கு
உள்ள மனசு கூட
பாவம் மனித மனசுக்கு
தனக்குள் இருக்கும் மனசை காட்ட
சந்தற்பம் கிடைக்காமலே போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
31-12-2002

காதல், இதயம்
அன்பு, மனசு
உடற் கூறுகள் ;
உணர்வுகள்
பிரித்தறி .
பிதற்றல் வேண்டாம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

மீண்டும் வரும் நாட்கள். (கவிதையோடு கரைதல்.)




கவிஞர்: மு.புஸ்பராஐன்.
கவிதைத் தொகுப்பு: மீண்டும் வரும் நாட்கள்.
கவிதைகள்: ஐம்பது.
பதிப்பகம்: தமிழியல்-காலச்சுவடு.

வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்கிறது.ஒரு காலை என்ற தலைப்பிட்ட கவிதை நாம் ஈழத்தில் வாழ்ந்த காலத்தை அப்படியே காட்சியாக நம் மனக்கண் முன் விரிக்கிறது. ஆனந்த வாழ்வை ஏக்கப் பொருமூச்சோடு வாசித்து முடிக்கிறபோது மீண்டும் மீண்டும் விடியல்வரும் என்கின்ற நம்பிக்கை தீபத்தை ஏற்றுகின்றதான வரி....

வெள்ளாப்பின்
அடிவானச் செம்மை நோக்கி
கரைந்து செல்கிறது காகம் ஒன்று

....நீதியும் சமாதானமும் என்ற தலைப்பிட்ட கவிதையில் வறுமைக் கோட்டின் விழிம்பில் தத்தழிக்கும் எம்மின மக்களின் அவலத்தை மிக அழகான வாற்தை கொண்டு வடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தவரிகள்:...

கால நகர்வில்
மீண்டும் எழுந்தன
வறுமையின் ஓச்சம்.
அடிவயிற்றில்
எழுந்த தீயோ
சிரசில் கொதிக்க
வயிறு தடவிய கைகள்
எங்கும் எழுந்தன.
நீண்டு உயர்ந்த கைகளை
வாள் கொண்டு வீசினர்.
வாள் முனையில்
வடிந்த குருதியை
வழித்தெறிந்து
குன்றில் ஏறிக்
குரலிடுகின்றார்.
இந்த நாடே
நீதியும் சமாதானமும்
நிலவும் நாடென....

இது பசிக்கொடுமையையும் அது தரும் வேதனையையும் அதனால் ஏற்பட்ட புரட்சியையும் அப்புரட்சி நசுக்கப்படும் முறையையும் நமக்கு சொல்லி நிற்கிறது. இதையே நீண்ட பெருமூச்சுக்கள் என்ற கவிதையும் அம்மாவும் அப்பாவும், வாடைக்காற்றே என்ற கவிதைகள் சொல்லி நிற்கின்றன

மாறுபட்ட கோணங்களில்.இத்தனை சோகங்களைச் சொன்ன கவிஞன் மீண்டும் புத்துயிர் பெற்று அழகிய கவிதையாகின்றான். கரைவும் விரிவும் என்ற தலைப்பிலான கவிதையில், இயற்கையை காதலிப்பவன் அடிக்கடி தன்னை நல்லதொரு கவிஞன் என வாசகர்களிற்கு அடையாளப்படுத்தப்படுகிறான்.

அந்த தரிசனத்தை கவிஞர் நமக்கு தந்துள்ளார். நாம் இயற்கையை ரசிப்பதற்கும் அந்த இயற்கையை வர்ணிக்கிறபோது கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. நம்மையெல்லாம் மௌனமாக அழைத்துசெல்கிறார் தனது கவி வரிகளோடு.

இன்னும் நிறையசொல்லுவார் என நினைத்த வாசகனை ஏமாற்றிவிடுகிறார். ஆனாலும் பாருங்கள் இந்த வரியில் ஒரு சுகமே நம்மை சூழ்கிறது. ...

என்னுள் நானே
மெல்ல மெல்ல
கரைதல் கண்டேன்.
மெல்ல மெல்ல
கரைந்து நிற்க
சொல்லில் விரியாச்சுகம்
சூழலெங்கும் சூழ்ந்திருந்த
கவிதைச் சுகமெல்லாம்
எந்தன் சிரசுள்
இதமாய் இறங்க
நானே கவிதையாய்
செறிந்து பரந்தேன்....

அடடா கவிஞனை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இந்த கவிதையை வாசிக்கிறபோது இதை எழுதிய கவிஞனே அந்த இயற்கையோடு கரைந்து ஆவியாகிற நிலமையை காணக் கூடியதாக உள்ளது. இதற்கெல்லாம் நல்லதொரு குழந்தை மனசும் கவிமனசும் தான் காரணம்.

இதற்கூடாக தன்னை இரண்டாவது முறையாக நல்லதொரு கவிஞன் என வாசகரின் உள்ளம் சொல்ல வைத்திருக்கிறார். இதைப்போலவே அகலிப்பு, புரிதல் கவிதைகளும் இயற்கையை பாடி நிற்கிறது.

அகலிப்பு -- ...

இரவே
இதயம் படிந்த
தடைகள் துடைக்க
ஏக்கமாக நானிங்கு. ...

இரவின் நிசப்பதத்தை அங்கலம் அங்குலமாக ரசித்த கவிஞனுக்கு புலம்பெயர் வாழ்வும் இயந்திரத்தனமான வாழ்வும் இரவின் நிசப்தத்தை கூறுபோடுவதாய் வந்தமர்ந்த கவிதையும் அந்த இரவின் யௌவன வரிவடிவங்களும் அழகு.

கவிஞர்கள் அடிக்கடி யோகநிலைக்கு வருவார்கள் அந்த நிலையை புரிதல் என்கின்ற கவிதையில் இந்த கவிஞன் அனுபவித்திருக்கிறார். ...

இன்னமும் நானுனக்கு
புரியாத புதிரா?
அதிக மௌனத்திலும்
உறவுகள் விலகி
உள்ளொடுங்கிப் போவதிலும்
வழிதவறிப்போனவனாய்
விசனமேன் கொள்கின்றாய்....

இப்படி பாடிய கவிஞர் இயற்கையை அணுவணுவாக ரசித்த செல்கின்ற காட்சி என்னை உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. இதில் என் விழியோரம் ஈரக்கசிதலை தந்து செல்கின்றதான வரிகள் . உண்மையிலேயே துடித்துப் போனேன். ...

கண்கொள்ளும் தூரம் வரை
அதோ இணையாது
நீண்டு செல்லும்
இரயில் பாதையில்
படிந்துள்ள துயரின்
மெல்லொலியை கேட்பதுண்டா

காட்டிடையில்
சூடிக்களிக்கவோ
பார்த்து மகிழவோ
எவருமின்றி
பூத்தப் பின்
உதிர்வு கொள்ளும்
மலர்களின் சோகத்தில்
கசிந்ததுண்டா... ...

இந்த கவிதையோடு ஒன்றித்த எனக்கு இந்த கவிதையில் இருந்து மீள்வது என்பது முடியாத காரியமாகிவிட்டது

.81 மே 31 இரவு - அன்றைய இராணுவ அடாவடித்தனங்கள் பற்றி சொல்லி நிற்கிறது. இதில் பெரிய ஆச்சரியம் ஒன்று - மரணவாசலை நமக்கு மொழிவடிவில், கவிவடிவில் தந்திருப்பது தான். வாசகனை அப்படியே மரணவாசல்வரை கொண்டு வந்து விட்டிருக்கிறார் தனது அந்த கவிதையூடாக....

உயிரை கையில் பிடித்தபடி
குண்டாந் தடிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
தப்பியோடிய மக்களில்
ஒருவனாய் என்னை
நினைத்திருப்பாய்

நானோ நம்பிக்கையின்
கடைசித்துளியும்
வடிந்து மரணத்தருகே. ...

இதற்கூடாக இன்னொன்றையும் நமக்கு சொல்லிச்செல்கிறது கவிதை - ஈழத்தவர் தினம் தினம் சாகடிக்கப்படாமலே செத்து செத்துப் பிளைக்கும் வாழ்வாகிப்போனவர்களென்று. இந்த கவிதை எழுதி பதின்நான்கு வருடங்களாகிறது - இந்த நிலை இன்னமும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

இதே போலவே இக்கணத்தில் வாழ்ந்துவிடு கவிதையும் எமது துயர வாழ்வை சொல்லி நிற்கிறது. அதில் ஒரு பந்தி:...

முனை முறிந்த தராசில்
நிறுக்கப்பட்டு
தீர்மானித்த இலக்கு நோக்கி
நகர்த்தப்படுவீh....என முடிக்கிறார். .அந்த அநீதியை மிக இலகுவாக வாசகரின் மனதில் படியச்செய்யும் படியான வாற்தை பிரயோகம் இது.

பீனிக்ஸ் என்ற தலைப்பிலான கவிதையில் தமிழனாக பிறந்ததால் எத்தனை அவலங்களை நம் ஆட்சிபீட அரசு செய்கிறது என்பதனை மென்மையாக சொல்லி இருக்கிறார்....

அன்னை மடியில்
தவழ்ந்த போது
சிறுவிழிகாட்டிச்
சின்ன வாயால்
அம்மாவென்று
அழைத்ததாலோ
நித்தம் நித்தம்
முள் முடி சூட்டியும்
ஆணிகள் அடித்தும்
சிலுவையில் அறைகிறாய்.? ...

தலைப்பிடப்படாத கவிதை - அதற்கூடாக காந்திதேசத்தை தோலுரித்தும் காட்டுகிறார். வெல்பவர் பக்கம் என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞர் சற்று தளர்ந்து போகிற நிலமையை காட்டுகிறது.

1987 இல் இந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த காலம் இந்திய இராணுவகாலம். அன்றைஈழத்தவரின் உண்மை நிலமையை அழகாக காட்டி இருக்கிறார். எதவுமே செய்ய முடியாத நிலை.

அந்தச் சோர்வை அவரின் கவிதை தத்துரூபமாக இயம்பி நிற்கிறது. அதனை தொடர்ந்து இந்திய இராணுவ அடாவடித்தனங்களையே அடுத்த கவிதையும் சொல்லி நிற்கிறது. கவிதை கைவிடப் பட்டோர் கவிஞரின் கையறு நிலை. மிகவும் மனம் நொந்து போயிருந்து எழுதியது தெரிகிறது....

வாளேந்திய சிங்கமும்
தூணேந்திய சிங்கங்களும்
இணைந்த போது
கைவிடப்பட்டோர் ஆகி
சிதறடிக்கப் பட்டனர்.
மீண்டும் தாய்மார்
இழுத்துச் செல்லப்படும்
புதல்வர்களுக்காய்
அந்நிய ஐPப்புக்களின்
பின்னால்தலைவிரி
கோலமாய்
கதறத்தொடங்கினர்....

வீழ்தலும் சோர்வும் எழுதலுக்கே என்பதற்கேற்ப உதிர்வு கவிதை. இரண்டு வருட இடைவெளியில் உதிர்வு நல்லதொரு பிரசவமாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.

என்னை ஒரு கணம் அதிரச் செய்த கவிதை விழியோரம் நீர் சிந்த வைத்த கவிதை அதற்கு தக்க மனமாற்றத்தை அள்ளிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறது இந்த உதிர்வு. ...

சிதைவுறாத மலர்களின் உதிர்வு
மகத்துவம் அன்றோ. அடடா அங்கே மனசு கனமானது இந்த வரிகளுக்காய் காட்டிடையில் சூடிக்களிக்கவோ பார்த்த மகிழவோ எவருமின்றி பூத்துப் பின் உதிர்வு கொள்ளும் மலர்களின் சோகத்தில் கசிந்ததுண்டோ....அதற்கு ஒத்தடம் தருவதாய் இந்த கவிதைஉதிர்வு...

பொன் ஒளிர் காலையில்
கண் மலர்ந்து
மௌனத்தில் கவிதை சொல்லும்
வண்ண மலர்கள்
அந்தி மென் இருளில்
வனப்பு இழந்து
வாடிப் பின் உதிர்கையில்
துயரம் என்னுள் கசியும்.
ஒரு நாள் பொழுதிலா
இவ்வெழில் வாழ்வென
ஏக்கம் என்னுள் வழியும்.
இவை எல்லாம் இன்று
அற்பமாய் போயின.
வேண்டாப் பொருளாய்
வள்ளத் தளத்தில் வீசியடித்த
கடுக்கா நண்டகளுக்காய்
வானின்று வீழ்ந்த பகையில்உடல்
சிதறிபஇபோகும் உயிர்கள் முன்னால்
சிதைவுறாத மலர்களின் உதிர்வு
மகத்துவம் அன்றோ....

கொடியும் கொம்பும் என்ற தலைப்பிலான கவிதையூடாக மூன்றாவது முறையாக தன்னை ஒரு கவிஞன் என அடையாளமிட வைத்திருக்கிறார் வாசகர்களுக்கு.

காதல் என்பது ஒரு வரம். காதல் செய்யாதவர் இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. அதே போல காதல் வலியை அல்லது காதலை பாடாதவன் கவிஞன் அல்லன்.

நீண்ட இடைவெளிகளின்
பின்சந்தித்த போது
முகமறியாதவள் போல்
கடந்து சென்றாய்.
கையில் குழந்தை
இடைவெளிகளில் கணவன்.

கொடியும் கொடிபடரும் கொம்பும்.
கல்லானாலும்
புல்லானாலும்
சமூகம் திணித்த
ஒழுக்கக் காற்றில்
நீயோர் அலையும் பஞ்சு.

இவற்றிடையே
நூல் நிலைய வேப்ப மரமும்
நீண்ட பஸ்தூர பயணங்களும்
உயிர்ப்புற
உன்மன அலையில்
என்கலம் ஆடும். ...

சந்தோச பெருங்கடலை வாசகர் முன் தந்து செல்கின்றார். இதே போல இன்னோர் காதல் கவிதை யாரது? எனும் தலைப்பிலான கவிதை.அதிலே கடைசி பந்தி நமது வயற்கால நினைவுகளை மனத்திடை நீர்சொட்ட வைத்துவிடுகிறான் இந்த கவிஞன். வயற்கரைக் காற்று பட்டாலே ஒரு சுகம் தான்..

பெயர்வு கவிதை
..அபாயம் என தெரிந்தும் இங்கு வந்து சேர்தவர்கள் தான் நாம். ஆனாலும் இன்று வாழப்பழகிக் கொண்டோம். இது பெரியதொரு சிந்தனைச் சிதறலாக வேதனைக்குரிய பகுதியாக பார்க்கப்பட வேண்டியது.


பதிவைப்பு என்ற தலைப்பிலான கவிதை புலம்பெயர்ந்தோர் பலரது வாழ்வின் கொடுமையை நிறுவமுயலும் கவிதை. பாராட்டுக்கள்.

புலம்பெயர்ந்தோர் அவல வாழ்வை கோடிடும் கவிதை. ...

வேரோடு பிடுங்கி
வளம் கொள் பூமியில்
பதிவைத்த வாழ்வோ
வேர் கொள்ளவில்லை.
மூடுண்ட அறையும்
அயலறியா வாழ்வும்
நினைவுகளாய்
வெந்து சிவந்த
எனது மண்ணின்
அழிவுகளின் குவியலும்
சிதறிப்போன உறவுகளும்
உடல்களும் ...

அம்மாவின் மரணம் ------- அனேகரது உறவுகள் மரணம் இப்படித்தான். புலம்பெயர் வாழ்வோரின் அவல வாழ்வை நிதர்சனப்படுத்தும் அடுத்த கவிதை இது.

கூடும் குயிலும்...தன் குரலுக்காய் இரத்தம் வழியக் குதறப்பட்டுவீதியில் விழுந்து துடிக்கிறதுகூடில்லா குயிற்குஞ்சு....நான்கே வரியானாலும் மனத்திடை பீதியை தருகிற வரிகள். இதற்கு எனது மௌனம் மட்டுமே பதிலாகிறது.

இதே போல இன்னோர் கவிதை நான்கே நான்கு வரிகள் தான் - மீறல் மீறல் இல்லா வாழ்வென்ன வாழ்வு. விதிக்கப்பட்ட கோட்டில் வாழ்கிறபோது புரட்சி ஏது? பாராட்டுக்கள்.

குளிர்கால மரம் பெரியதொரு மனச்சுமை பலவீனம் நம்பிக்கையீனம். ஈழத்து மற்றும் புலம்பெயர் வாழ்நிலை சூழல் தந்த கொடுமையின் ரணம் நிறந்த கவிதை. யன்னல் என்ற தலைப்பிலான கவிதை இன்னமும் புலத்தமிழர் பலரது மன, வாழ் நிலையை கூறிநிற்கிறது. புலம் பெயர் வாழ்நிலையோடு ஒன்றிடாத மனசும் வாழ்வியலும். கனவுகளும் வாழ்த்துக்களும் என்ற தலைப்பில் அமைந்த கவிதை - இதுவும் இன்றைய புலம்பெயர் வாழ்வோடு ஒன்றிக்க இயலாத மனஇயல்பை காட்டி நிற்கிறது. பல ஏக்கங்களையும் சோக சுமைகளையும் அன்றைய நல்வாழ்வையும் எண்ணி ஏங்கி நிற்கும் நிலை.

ஆனாலும் கவிஞருக்கு ஒன்று இக்கணத்தில் வாழ்ந்த விடு என தலைப்பிட்டு ஓர் கவிதையை எழுதிவிட்டு இன்றய கையிலமர்ந்த வாழ்வை வாழ முடியாமல் தத்தழிப்பதை நிறுத்தி விட்டு இன்றய பொழுதில் புலமானால் என்ன வாழப் பழகிக்கொள்ளுங்கள்.

இழப்பு... என்ற தலைப்பிலான கவிதை - இந்த மனநிலை இன்றைய புலம்பெயர் வாழ்வின் பலரது - அதாவது அன்றைய காலத்தில் ஈழத்தில் பிரபல விளையாட்டு வீரர்களது ஏக்க பெரு மூச்சை கொண்டு வந்து தருகிறது. எனக்கும் இன்றைய பந்தயங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறபோது சில சமயம் அழுதுவிடுவேன். இந்த கவிஞன் நல்லதொரு விளையாட்டு வீரனாகவும் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெட்டத்தெளிவாகிறது....

நண்பனுக்கு என்ற தலைப்பிலான கவிதை

நண்ப சுதந்திரத்திற்கான
இருப்பு உனதென்றாய்.
நன்று.சுதந்திரம்இனிது .
நிறைவும் தருவது.
உனக்கு ஒவ்வாதோருடன்
நட்பு நான் கொள்கையில்
உன்னுள் நிகழ்வது என்ன?
நண்பஅவரவர் கருத்துடன்
புரிதலுடன் வாழப்பழகுதலே
இனிதும் நிறைவும். ...

இப்படி நினைத்து விட்டால் பிரச்சனைகள் தான் ஏது? சுதந்திரத்தின் மகிமையும் ஒவ்வொருவரினதும் உறுதியான இருப்பும் இது தான்.

மண்ணும் மனமும் கவிதையில் - இக் கவிதையும் புலப்பெயர்வு நமக்கெல்லாம் தந்த சோகத்தை சுமந்து நிற்கிறது. ...ஒருகாலை நேரப் புல்லாங்குழல் ஓசையாய் மனதை வருடும் மனைவி நினைவுகளும் மார்பில் தூங்கிய மழலைச் செல்வங்களும் இன்னும் இவையாய் என்மனக்காவில் குதிரையோடு வருவதற்கு குத்தகை தந்தது யார்? மண்ணுக்கும் மன உறவுக்குமான வோர்ஆத்மார்த்தமானதுஅதிகாரத்தால் அறுவதில்லை அறிக....இதில் ஆக்ரோசம் பொங்க புலம்பெயர்ந்தோரது ஒட்டுமொத்த குரலாய் பதிவுசெய்திருக்கிறார்.

மைனாவிடு தூது - ஈழத்து சோகத்தை சுமந்து நிக்கும் கவிதை. பனிக்காலம் தான் இங்கு எமக்கு அதிக தனிமையை தந்து நிற்பது. அத்தகையதொரு பனிக்கால தனிமையில் இருந்து இந்த கவிதையை எழுதி இருக்கிறார் கவிஞர். ...1996 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கோபம் கொதிப்பு யதார்த்தமானது தான். காரணத்தை இந்த கவிதையிலேயே கதையாக சொல்லி இருக்கிறார்.

உணர்வுகளை வெளிப்படையாக எழுத்தில் தெரிவிக்காதவன் கவிஞன் இல்லையே. நல்லதொரு காலப்பதிவு இது.

இதே போல வெண்புறா என தலைப்பிட்ட கவிதை வெண்புறாவை வரவேகின்றதான கவிதை இது. ...

தனிமை என்பது கொடுமை. அதைவிட கொடுமை சகல இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒன்றாய் வாழ்வாகிப்போன தம்பதிகள் பிரிவது. அந்த சோகச்சுமையை இந்த தனிமை சொல்லி நிற்கிறது....

வல்லூறும் வெண்புறாவும் என்ற தலைப்பிலான கவிதை - இதை நல்லதொரு சுவாரசியமான கதைவடிவாக கொண்டு போகிறார். சிங்கள அரசு நமக்கு செய்த கொடுமைகளின் காலப்பதிவு. மிக சுருக்கமாக வரலாறை சொல்ல முனைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. நாலே நாலு பக்கங்களிற்குள் எமது நீண்டகால இனவெறி அரசின் அராஐகத்தை இரத்தினச்சுருக்கமாக தந்திருக்கிறார்.

கண்ணடி என தலைப்பிடப்பட்ட கவிதை - எப்போது ஒருவன் தன் அழகை இரசிக்கிறானோ அப்போ அவனுக்கு இந்த உலகம் பிடித்து போகிறது அல்லது வாழத் தொடங்கிவிட்டான் என பொருள்.

சோகத்தையும் பிரிவுத்துயரங்களையும் பாடிய கவிஞன் வாழத்தொடங்கி இருப்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. இப்படி நான் எழுதி முடித்துவிட்டு அடுத்த கவிதைக்குள் நுழைகிறபோது நான் சொன்ன இந்த வாழ்தல் அங்கே தெரிகிறது.

கவிதை அந்தியின் மின்னல் - அதோபோல கோடை - அதே போல ஓயாத அலை. இந்த கவிஞன் வாழத்தொடங்கி இருப்பது மனதிற்கு சந்தோசத்தை தருகிறது. வாழ்த்துக்கள்.அம்மாவின் முகம் இதில் வரிகள் நம்மையும் பலத்த சோகத்திற்குள்ளாக்குகிறது....

. இவரது முதல் கவிதையான ஒரு காலை என்ற கவிதையில் காகம் என்ற பறவையை மட்டும் ஏன் எழுதி இருக்கிறார் என்கின்றதான கேள்வி எனக்கு ஆரம்பம் முதலாய் வந்து கொண்டே இருக்கிறது. காரணம் நான் கூட காகம் என்ற தலைப்பிலான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். இதனால் தான் இவரது கவிதைகளோடு ஒன்றித்தேனோ என்று கூட ஒரு சந்தேகம்.

ஆனாலும் இக் கவிஞனது கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபோது தான் புரிந்தது, அப்படியல்ல என. காகம் யாருக்குமே தீங்கு செய்யாத பறவை. அழுக்குகளை அகற்றுகின்ற பறவை. தனது இனம் ஒன்று மரணித்துவிட்டால் ஊரையே கூட்டி வைத்து அழும். அத் தன்மையான கவி மன உணர்வை இந்த கவிஞன் கொண்டுள்ளான் என்பது இக்கவிஞனது கவிதைகளிற்கூடாக தெரிகிறது. ஆக மொத்தத்தில் இந்த கவிஞன் நல்லதொரு சமூக அக்கறை கொண்ட கவிஞனாகவே மிளிர்கிறான்.

வசதியாக, மரம் பற்றிய பாடல் ஆகிய கவிதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதனை புரிந்தும் புரியாத நிலை. ஆனாலும் ஓரளவு உணரமுடிகிறது. சரியானதா தவறாய்ப்போகுமா என்பதில் சற்று மனத் தயக்கம் எனக்கு. ஆனாலும் பலமுறை வாசித்ததில் நல்லதொரு சமூக, குடும்ப அக்கறை தெரிகிறது.

அதே போல ஸ்ராலின் கைகுலுக்க மறுத்த போது என்ற கவிதையிலும் சமூக அக்கறை தெரிகிறது.

இறுதியாக கவிதை என்கின்ற தலைப்பிலான கவிதை பற்றி....

வேலைச்சுமையிடை
மின்னலாய்
தெறித்தன
கவிதை வரிகள்
தெறித்த பொறியில்
விகாசம் கொள்ளாது
மன யன்னலை
மூடிவேலை முடித்து
மின்னல் ஒளியை
மீட்க முயல்கையில்
உயிர் இழந்து கிடந்தது கவிதை....

கவிதையும் வாழ்வும் ஒன்று. கவிதை வருகிற போது எழுதிவிடவேண்டும். அதே போல் தான் நமக்கொல்லாம் கிடைத்த மனிட வாழ்வும். இன்று வாழாது போனால் நாளை ஏது அந்த வாழ்வு? திரும்பி வந்துவிடுமா என்ன....!? எனது தந்தை அடிக்கடி சொல்வார் இன்று செத்தால் நாளை பால் என்பார். இன்றைய பொழுதை இன்பமாக்குவதே பேரின்ப வாழ்வு. இன்றைய நாளையும் இனிவரும் காலங்களை நமதாக்குவோம். வாழ்ந்து முடிப்போம். ...

வாழ்க்கை ஒரு முறை
வாழ்ந்து விடு .
வீழ்ந்துவிடாதே.

நளாயினி தாமரைச்செல்வன்.

Monday, October 24, 2005

சுவிசில் ஓர் விடுமுறை நாளில் அதிகாலைப் பொழுது..

சிவத்தக் கொண்டை,
உருட்டும்
உருண்டை விழிகள்.
கொட்டாவி விட்டே
சோம்பல் முறித்து
விடியலைக் கூறும்.

வேலை அலுப்பில் இரவு
கட்டிலில் விழுந்த உடம்பு.

உடம்பசதி, நேரம்,
இவை எல்லாம் தெரியாமல்
அல்ப்ஸ் மலைத்தொடரின்
மடியில் இருந்து
விழுந்து தொலைக்கும்
சூரியக் குழந்தை.

அடர்ந்த
போர்வையையும்
தாண்டி
காலில் முத்தமிட்டு
அட சீ..

மெல்ல , மெல்ல,
உடம்பெல்லாம் சூடேற்றி
கண்மடலில் உரசி
சூடாய் முத்தமிட்டு
கண் மணியோடு
சண்டை பிடிக்கும்
சூரிய உதடு.

சிணுங்கும் என்னை
இறுக அணைத்து
இழுத்துச் செல்லும்
சூரியக் கைகள்.

யன்னல் திறந்து
வெளியில் பார்த்தால்
சூரியனின் முகம் பார்த்து
முத்தமிடும் சக்களத்தி .

அடடே..!
மஞ்சள் கம்பளம் மேல்
கறுத்தப் புள்ளிகள்.
திருஸ்டிக் கழிப்போ.!?

குளித்து
சுத்தபத்தமாய் ,
பறவைகளின்
இசை கேட்ட படி
சூரிய அடுப்பில்
உணவு தயாரிக்கும்
மரங்கள்.

இசை விற்பனர் எ
ல்லாம் தோற்றனர் போ.

ஒருவரை ஒருவர்
மிதித்தெழாது
கீதம் இசைக்கும்
குருவிகளின்
கான இசை.

ம்!
தனிப்பாட்டு ,
குழுப்பாட்டு
எல்லாம், எல்லாம்.
போதை ஏறும்.

உணர்வில் மேடை போட்டு
கானம் இசைக்கும் துள்ளல்.

மனசோ..
ஓசை எழுப்பாமல்
இறக்கை நெய்து
மரக்கிளையின்
பனித்துளிகளைக்
காயப்படுத்தாமல்
மரத்தில் அமர்வு.

இவற்றை எல்லாம்
தொலைத்து
அவசரமாய்ப் போகும்
ஆறு மணிப் புகையிரதம்.

ஓடி ,ஓடி
தானும் களைத்து
இயற்கையையும் மாசாக்கி
இன்று மட்டும்
ஓய்வெடுக்கும்
சிவப்பு ,வெள்ளை
கறுப்பாய் கார்கள்.

மலையின் உச்சியில்
பனி மணல்
பல இரவுகள்
வீணாய் நிலா.
யாருமில்லை அங்கு.,

ஏக்கத்தோடு
மலையுள்
முகம் மறைத்து

என் மனசு மட்டும்
கீச்சு மாச்சு தம்பளம்
விளையாடிய காலைகள்.

அருகில் பச்சை
மரக்குடைகளின் கீழ்
இரவுக் காதலனின்
சரசத்தை சுகித்த படி
சூரிய உதடுகளை
முத்தமிடத்துடிக்கும் பூக்கள்.

அதனுள் மரத்தை தறித்து
தாம் அமர செய்து வைத்துள்ள
பொறுப்பற்ற மனிதரின்
இருக்கும் அமர்வுகள்.

இவற்றை எல்லாம்
ரசிக்க மறந்து
உலக விடயத்துள்
மூழ்கிய படி
இருக்கும் அமர்வில்
வெள்ளைக்காரப் பாட்டி.

என்ன பார்க்கிறாய்..!?
வா.. வா.. அருகில்.

என்னைப்போல்
உன்னால் பூக்க முடியுமா ?
எனக் கூறி
சிவந்து,சிரித்து நிக்கும்
அப்பிள் பூக்கள்.

என் வீட்டுப்
பனங் கூடலுக்கால்
முகங்காட்டி வரும்
என் வீட்டுச்சூரியனை
நினைத்து, நினைத்து
சொல்ல நினைத்ததை
சொல்லாமல் தடுத்தது
தழுதழுத்த குரல்.

விம்மி , வெடித்து
மீண்டும் பஞ்சணையில்
முகம் புதைத்தழும்
உயிரும் மனசும்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Sunday, October 23, 2005

உனக்குள் இறங்கு.
களை புடுங்கு.
உன்னை உழு
மூத்தோர் சிந்தனை விதை.
அறுவடைக்குத் தயாராகு.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Saturday, October 22, 2005

எப்போ..!?


நீ என் உணர்வுகளை
உணர மறுத்துவிட்டு
உன் இஸ்டப்படி
வர்ணிக்கிறாய்.

என்னை பூ வென்பாய்
மரத்திலிருந்து
உதிருமுன்பே பறித்து
மாலையாக்குவாய்.

நிலவென்பாய்
நிலவை மறைக்கும்
கரு மேகங்களாய் நீ
தொல்லை தருகிறாய்.

எரிச்சலடைந்து
தேய்பிறை
வளர்பிறையாய் நான்.

பஞ்சுப்பதுமை என்பாய்
என்னை எங்கே
சுதந்திரமாய் உலாவரவிட்டாய்.
உனக்கு சுகம் தரவல்லா
எனை ஆக்கினாய்.

உன் வர்ணனை
எனக்கு வேண்டாம்.

என்னை நான்
இயல்பாய் உணர்ந்து
இயங்க வைப்பது எப்போ?
நளாயினி தாமரைச்செல்வன்.

Thursday, October 20, 2005

ஆண், பெண்
அடிமை விலங்கு.
நேயமாய் வாழ்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

எனக்குள் எரியும் நெருப்பு.


என் பிறப்பே உனக்கென்றாய்.
உன் விழி கொண்டு
அன்பைஊற்றெடுக்க
செய்தாய் என்றாய்-
என் இனியவளே
இனி நீயே-என்
இதயம் என்றாய்-
உன்சிரிப்பே
என் ஒளி என்றாய்.
உதயம் என்றாய்.
உன்னிப்பாய்
என் செவிகள்-
உன்உயிர்ப்பை
புரிந்தன.
உயிர்ப் பூக்களாய்
இப்புவியில்
உலா வருவோம்
என்றாய்.
உன்உருவத்திலும்
அன்பு உயர்வாய்
எனக்கு.
உன் கண் சிமிட்டலில்
நசிந்தேன் என்றாய்.
ஏன் தூரம் சென்றாய்?
உன் நினைவுகள்
மட்டுமே என்னிடம்.
ஏனோ என் நினைவுகள்
இன்னும் உனக்காய்
உயிர்ப்புடன்.
இன்றும் உன்னிப்பாய்
உன்குரலுக்காக
என் செவிகளை
செவிடாக்காது.

நளாயினி தாமரைச்செல்வன்
இயலாமை என்பது
சோர்வின் அறிகுறி.
துடைத்தெறி.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

இதயம் உன்னை வரைந்து பார்க்கிறது.!


உன் பார்வையால்
என்னுள்
மின்னல் ஒன்று
எழுந்து ஓயும்.
உன் வார்த்தை ஜாலத்தில்
என் நாடி நரம்பெல்லாம்
வாத்தியமாகும்.
தெரியாதது போல்
உன் தேவை கருதி
நீ எனைத் தொடும் போது
என்னுள் மிருதங்க அதிர்வு
இப்படித்தான் இப்போ
மனசு உன்னை
அடிக்கடி
ஞாபகப்படுத்திக் கொள்கிறது.
அடடே!
இங்கே பாரேன்.
என்னையும் கேட்காமல்
உன்னையும் கேட்காமல்
என் இதயம்
அடிக்கடி
உன்னை வரைந்து பார்த்து
வர்ணம் தீட்டுகிறது.

நளாயினி தாமரைச் செல்வன்.

Sunday, October 16, 2005


விதி விடு.
ஊக்கம் கொள்.
உயர்வு நிச்சயம்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

கருவை சுமப்பது எப்படி?


என் கருப்பையை
எப்போதும்
மூடிவைக்கவே
விரும்புகிறேன்.

என் வாழ்வே
பயங்கரமானதாகிற போது
எப்படி?

அகதி வாழ்வும்
அவலப்பெயர்வும்
பதுங்கு குளியும்
பாய் விரித்து படுக்க முடியாத
நிம்மதியற்ற இரவும்
எப்போது
நான் பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாவேனோ என்பதுவும்
வசந்தமில்லா வாழ்வும்
நம்பிக்கை சிறிது மில்லா
பாலைவன மனதும்
எக் கணமும்
என் உயிர் பறிக்கப்படலாம்
என்கின்ற உண்மைகள்
எல்லாவற்றையும் மறைத்து
எப்படி ஓர் உயிரை
என் கருப்பையில் சுமப்பது?
நளாயினி தாமரைச்செல்வன்.

Saturday, October 15, 2005

மழைத்துளி
விழிசேர்.
புதிய உணர்வுகள்
உடல் சேர்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

பூஜிக்கத் தொடங்கி விட்டேன்.


என் இதயத்தில்
நீ புரண்டெழுவதை
உணர்கிறது மனம்.
என் இதயம் துடிக்கிறதா?
உன் பெயரை உச்சரிக்கிறதா?
துடிப்பும் உச்சரிப்பும்
ஒன்றாய்த் தெரிகிறது.
இல்லை, இல்லை
சந்தேகம் தெளிந்தது
லப், டப் எனும்இதயம்
இப்போ உன் பெயரைத்தான்
உச்சரித்துக் கொள்கிறது.
உன் பெயரை
உச்சரிக்கத் தெரிந்த
இந்தஇதயத்திற்கு
உன்னிடம் ¨
என் காதலைச் சொல்லும்
தைரியம்ஏன் இல்லை?
ஓ! என் உதடுகளுக்கு
உன் முகவரி இட்டு
காதல்க் கடிதத்தை
அனுப்பட்டும் இதயம்.
நளாயினி தாமரைச்செல்வன்
சுட்டெரிக்கும்
சுூரியன் வெறு.
சுடராய் மிளிர்.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Thursday, October 13, 2005

இன்ப வலி.

உன்னை
என் விழிகள்கண்டதும்
என்னமாய் படபடக்கும்.
அதனூடே
கூச்சமும்
காதலும்
என்னுள்
பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
பூகம்ப அதிர்வு.
எங்கே
நம்மை காதலர்
என இனம்
கண்டிடுவரோ என.
ஒளிந்து ஒளிந்து
காதலிப்பதில் தான்
எத்தனை சுகம்.
யாருக்கும்
தெரியாமல்
உன் நினைவுகளை
சுமந்தபடிநானும்
என் நினைவுகளை
சுமந்த படி நீயும்
காத்திருக்கும்
காத்திருப்புகள்
எவ்வளவு
அற்புதமானவை.
நளாயினி தாமரைச்செல்வன்

உணர்வுகளை மெல்லாதே.
உரத்துச்சொல்லு.
நீண்ட ஆயுள்.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.........


ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
காலையிலை ஆறுமணி வேலைக்கு எழும்ப வேணும்.
தொல்லையின்றி படுத்தால்தான் வேலைக்குச் சென்றிடலாம்.
பாட்டி இல்லை, பாட்டன் இல்லை பக்கத்துணை யாருமில்லை.
பாசத்திற்கு பஞ்சமிங்கு டேக்கயருக்கு போக வேணும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.

வேலைக்குப் போனால் தான் காசு பணம் சேர்த்திடலாம்.
நாளைக்கு வளர்ந்து நீயும் படித்துழைத்துஈழத்தைஉயர்த்திடலாம். நான் மடிந்து போனாலும் என்கடமை தொடர்ந்திடுவாய்
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.

மழலை கேட்க முடியவில்லை;அமுதூட்ட முடியவில்லை
இதயம் கனக்கிறது, விழி நீர் வழிகிறது.
என் சோகம் சொல்லி விட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு .

செல்லடிச் சத்தமில்லை, பெம்பர் கிபீர் உறுமலில்லை
சத்துணவுக் குறைவுமில்லை, மரத்தின் கீழ் உறக்கமில்லை.
பஞ்சணையில் தூங்குகின்றாய், பக்கத்துணைதான்யாருமில்லை.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.

பால்தடைக்கு ஊசி போட்டும் மார்பால் பால் சுரக்கிறது.
உணவுத் தடையால் அங்கு பாலே வற்றிப்போச்சு.
வெற்று மார்புள் முகம்புதைத்தழும் பிஞ்சுகள் தான் எத்தனை.
இதயம் கனக்கிறது, நெஞ்சும் வெடிக்கிறது, விழி நீர் எரிகிறது.
என் சோகம் சொல்லிவிட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
நளாயினி தாமரைச்செல்வன்.
1994

Wednesday, October 12, 2005

ஒத்த உணர்வு
தோழமை வளர்.
தோள்சாய்

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

தேதி ஒன்று குறிங்கையா...

புத்தகம் திறந்தாலும்
புழுதி மண்ணில் நடந்தாலும்
புளுகித்திரிய மனசில்லை
இந்த பொண்ணு மனசில் நீதானையா.

வெக்கம் வெக்கம் எண்டு
மனசு அடிச்சாலும்
உதடு எப்பவும்
உங்க பெயரைத்தான்
உச்சரித்து பார்க்கிறது.

படிப்பம் படிப்பம் எண்டு
மனசு சொன்னாலும்
புத்தகத்துள் ஒளித்து வைத்த
உங்க புகைப்படம் தான் பார்க்கிறேனே.

படுப்பம் படுப்பம் எண்டு
பாய் விரிச்சு போட்டாலும்
கள்ள மற்ற உங்க சிரிப்பு
கண்ணுறங்கையிலை வந்து நிக்குமையா.

சேவல் கூவையிலும்
உறக்கம் தான் வருகுதில்லை.
சிவப்பழகன் நீங்கதாங்க
கண்ணுக்குழிக்கை நிக்கிறீங்க.

புற்தரையில் நடந்தாலும்
ஒக்காந்து இருந்தாலும்
மவராசன் நடந்து வரும்
மாதிரித்தான் இருக்கிறது.

உறக்கம் கொண்டாத்தான்
கனவு வருமையா.
உறங்கி நாளாச்சு
கனவும் வந்ததில்லை.
உங்க குறும்புகளை
நெஞ்சுக்குழிக்கை வைச்சதாலை
நெனைச்சே நெனைச்சே
இந்த மவராசி உசிரு மருகுதையா.

நீங்க நடந்து போனா
புல் பூச்சி சாகாதையா
இந்த புள்ளை மனசை மட்டும்ஏ
னையா கசக்கி புழிகிறீக.

உசிரும் உசிரும் உரசி
ஊசிரே வலிக்குதையா.
ஊரறிய மாலையிட
தேதி ஒன்று குறிங்கையா.
நளாயினி தாமரைச்செல்வன்.
1997

Monday, October 10, 2005

தனித்திரு.
அசை போடு.
விழித் தெழு.
வீரம் விதை.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

யன்னல்..


யன்னல்களும்
அதன் திக்குகளும்
அதற் கூடே
மாறி மாறி தெரியும்
காட்சிகள் மட்டுமே
பழக்கப்பட்ட
இந்த பூமியில்;

வேகமாய் ஓடும்
றெயிலைப்போல்
என் மனசும்
ஈழம் விரைகிறது .

இப்படித்தான்
நினைவுச் சுரங்கத்தால்
மட்டுமே ஈழத்தை
அடைகிறேன்.

சிந்திய குருதிகளுக்குள்
எத்தனை காவியங்கள்.
எழுகின்ற அலைகளுக்குள்
எத்தனை முகம் தெரியா உணர்வுகள்.

இவர்களுக்கு மின்மினி
இல்லா இரவுகள் கூட
ஈழம் மிதந்துவரும்
கனவுகளைத்தான்
தந்திருக்கிறது.
பயத்தை அல்ல..

வெடித்து சிதறியது
அவர்கள்
உடல்கள் மட்டுமே
ஆனால் அவர் தம் கொள்கைகள்
மற்றையோர் மனங்களில்
ஆழமாய் புதைந்து
ஆணிவேர் விடுகிறது.

வேகமாய் ஓடிய ரயில்
கண்ணின் பிடிதூரம்
மறையும் முன்பே
குழந்தையின்
"அம்மா" எனும் ஓசை
செவிபாயும் .
தபால்காரன் மணிச்சத்தம்;
ஈழத்து சோகங்களை மட்டுமே
சுமந்து வரும் கடிதம்
நலமேதும் விசாரிக்காமல்.

வேலை
கணவன்
குழந்தை
சம்பளக்கவர்
என மீண்டும்
இயந்திர வாழ்க்கையுள்
ஐக்கியமாகிவிடுகிறோம்.

யன்னல்களுக்குள்
அடங்கிப்போன
எம் வாழ்வு போல்
உணர்வுகளும்
அடங்கித்தான் போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
2002

Sunday, October 09, 2005

புதிதாய் பிறந்து விட்டுப் போகிறேன்..


அந்த வீதியில்
நீயும் ,நானும்
நட்பாய்
தெரிந்தமுகம் ஒன்று.
நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்.
ஆனால் நீயோ
அவனைப்பார்த்து
என்ன இழிப்பு?
என கூறிய போது
ஏனோ அதிகம்
இடிந்து போனது
நம் காதல் தான்.
உனக்கான
காத்திருப்பில்
நீ வரப் பிந்தியதால்
உன் நண்பனோடு
சிரித்துக் கதைத்தேன்.
ஆனால் நீயோ
என்ன கதைத்தாய்
என என்னைக்
குடைந்தெடுத்து
குற்றக் கூண்டில்
நிறுத்தினாய் பார்
அப்போ என் மனம்
நீ என் மீது
வைத்துள்ள
காதலையும்,
நம்பிக்கையையும்
ஆய்வு செய்து
அறிக்கை எழுத
தவற வில்லை.
என் கூந்தலை
வெட்டியதற்காய்
எப்படி எல்லாம்
திட்டித் தீர்த்தாய்.
நான் உன்னில் இருந்து
விலகிப் போகவல்லா
செய்து விட்டாய்.
காதல் என்றால்
என்ன வென்று
தெரியுமாஉனக்கு.?
எனக்கே எனக்கான
வாழ்வையும்
உனக்கே உனக்கான
வாழ்வையும்
நீயும் , நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்.
அதற்காய்
என் வாழ்வை
என் விருப்பு வெறுப்பை
எல்லாம் துறந்து
உனக்காய் மட்டும்
உன் விருப்பு வெறுப்போடு
உனக்காய் வாழ
எனக்கு இஸ்டமில்லை.
நீ நினைக்கும்
குருட்டு
செவிட்டு
ஊமைக்
காதலியாக
நான் இருப்பேன்
எனநினையாதே.
என்னை
சிதை ஏற்றாமல்
என்னை எனக்கே
திருப்பித் தந்துவிடு.
போதும்
நீ என் மீது வைத்த காதலும்
அதன் மீதான நம்பிக்கையும்.
போனால் போகிறது
நான் உன் மீதுகொண்ட
காதலை புதைத்து
மீண்டும்
புதிதாய்
பிறந்து விட்டுப் போகிறேன்.
நளாயினி

Friday, October 07, 2005

இன்பமான தருணங்கள்...(9)

சிந்தனை வளர்
செயல் கொள்.
உன்னத வாழ்வு.
நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Wednesday, October 05, 2005

எப்போதும் சூரியனாய்.........



அந்த மாலைப்பொழுதின்
மதுரமாக நீ.
சூரியக் கதிர்கள் போல்
உன் விழிகள்.
உன் பார்வையில்
ஓர் குளிர்மை.
உன் தேசிப்பழ நிற மேனி
ஏனோ என்னை அதிகம் கொல்கிறது.
சூரியனோ தன் சேவை முடித்து
ஓய்வு பெற நீ மட்டும்
எனக்கு எப்போதும் சூரியனாய்.
நீ குளித்து விட்டு
தலை முடியைஉதறிய
நீர்த்துளியில்பூத்தது தான்
உன் மீதானகாதல்.
உன் குரல்செவி வழிபாய்ந்து
மனதை அள்ளும்.
உன் வார்த்தையின்
மென்மையில்
கன்னம் வைத்து
துயிலும் மனசு.
உன் தமிழ்த் தோட்டத்துள்
நீ கொய்து அனுப்பும்
வாசனை வார்த்தைகளின்உறுதி
நிச்சயமாய்
உன் மீதானகாதலுக்கு
மாலை சூட்டும்.
இப்போதெல்லாம்
எப்போதும்
உன் நினைவாய்.
உயிரும் , மனசும்
என்னிடமில்லை.
அவை இப்போ
புதிய அத்தியாயத்தை
பிரசவித்து நிற்கிறது.
நளாயினி

Sunday, October 02, 2005

இன்பமான தருணங்கள்...(8)

குழந்தைகளை நேசி.
குதூகலம் கொள்.
மூப்பைத் தள்ளிப்போடு.

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Saturday, October 01, 2005

உயிர்த்தீ......1

பயணம்
அது எத்தனை
நீண்ட தொடராய்.

ஏறுவோரும்
இறங்குவோரும்
நேரத்தை தவறவிட்டு
காத்து நிப்போரும்
அருகிருந்து
சிரித்து விட்டு
முகம் சுழித்தே போவோரும்
பிடிக்காத போது
விலத்தி இருக்க
வைப்போரும்
கை பிடி தவறி
படிகளில் விழும் போது
ஓடிவந்து
கைபிடித்து தூக்குவோரும்
பாரங்களை
சுமக்கிறபோது
பக்குவமாய்
இறக்கிவைக்க
உதவுவோரும்
மலையில் இருந்து
விழும் நீர்வீழ்ச்சியாய்
அதன் மனசெல்லாம்
உணர்வெல்லாம்
மகிழ்வைத்தருவோரும்
இது புகையிரதப்
பயணம் போல்
தரிப்பிடங்கள்
ஏதுமில்லை
பலர் ஏறுவர்
இறங்குவர்
காணாமலும் போவர்.
ஆனாலும் யாரோ
ஓரிருவர் மட்டுமே
காக்க வைத்து
தவிக்க விட்டு
பயணமுடிவு வரை
வரவேண்டுமென.
ஒத்த உணர்வுகள்
நிச்சயம் தொடர்ந்து வரும்.
சுவாரசியமும்
துன்பமும்
ஏக்கமும்
ஆசையும்
காதலுமாய்
பயணம் நீண்டுதான்
போகிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.