Thursday, April 19, 2007

நட்பு கேட்டதும் கிடைத்துவிடும் வரமா என்ன.!?


பிரிந்தா செல்கிறாய்.?!!!
போ.!!போ.!!போ.!!
மீண்டும் வருவாய் தெரியும் எனக்கு.



நட்பு கேட்டதும்
கிடைத்து விடும்
வரமா என்ன.?


என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.




எனக்கருகில் நீ இருந்தால்
துன்பமே நெருங்காது......!

Tuesday, April 17, 2007

பிரான்ஸ் எவியோன் வாவிக்கரையில் அழகியதொரு பொழுது.....!




Sunday, April 15, 2007

வசந்தம் வந்தாச்சு.


Thursday, April 05, 2007

போரின் வலி

பனிமுகட்டை அளைந்து வந்து
எனை அணைத்து முத்தமிட்டு
நலம் விசாரிக்கும் குதூகலம்
இங்குள்ள கை கால் முளைத்த
பனிக்கால குளிர்காற்றுக்கு.

ஆனாலும் பனி மழை
ஓய்ந்த பின்னான
வான வீதியில்
தரையிறங்க முடியாத
கனத்த முகிலின் அவஸ்த்தை
எனக்குள்.

எனது இலங்கைத்தீவின்
உயிர்களுக்கு
இழைக்கும் துன்பத்தை
பனிப்பொழிவுக் காலத்தில்
என் கன்னம் அறைந்து சொல்கிறது
ஊசி கொண்டலையும் குளிர்காற்று.

பனியளைந்து எனது பிள்ளைகள்
விளையாடும்போது
சுழன்றடித்து
கண்ணாடித்துகள் கொண்டலையும்
பனிக்காற்று
கன்னம் செவிப்பறை அதிர
ஊழையிட்டு
எனை முடங்கச்செய்து
குருதிவெள்ளத்துள்
தோய்ந்து கிடக்கும்
பிணக்குவியல்கள் முன்னிருத்தி
ஓ.. வென கதறி அழவைத்து
நான் நடுங்குவதைப் பார்த்து
கைகொட்டிச்சிரிக்கிறது.

உணர்வும் உடலும்
மரத்துப்போன பொழுதுகளில்
என்னை நுள்ளி
என்னை நானே உரசி சூடேற்றுகையில்
இந்த பனிக்கால நினைவுகள்
என்ன செய்துவிடமுடியும் என
என்னுள் தீப்பொறி பட்டுத்தெறிக்கிறது.

மரத்துக்கிடந்த இயற்கை எல்லாம்
பூத்துக் குலுங்குகையில்
நான் வாழ்ந்த காலத்தில்
சிரித்து மகிழ்ந்த பெண்களின்
அவலக்குரல்களையும்
அழகாய்த்தெரிந்த ஆண்களின்
காணாமல் போன செய்திகளையும்
ஞாபகப்படுத்திக் கொன்று வதைக்கிறது.

நான் வாழ்ந்த சொற்க வெளிவாழ்வு
பயங்கரம் நிறைந்ததாய் இப்போதெல்லாம்.
எனது வேர்கள் சிதிலப்பட்டு சிதைக்கப்பட்டு.
கூட்டி அள்ளி ஒட்டினாலும்
வலியாலும் ரணங்களாலும்
சீழ்பிடித்த ஆறா மனக்காயங்களாலும்
நெளிந்துழலும் ஒரு பூமிப்பந்தாய் நான்.


சுவிற்சலாந்து.
20-03.2007