Saturday, November 26, 2005

உயிர்த்தீ......5

சில சமயம்
மணிக்கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
எதையும்
அனுமானித்து விட
முடிவதில்லை
இந்த
பனிப்புகார்
காலத்தில்.

பகலா? இரவா?
சற்று குழப்பம் தான்.

ஆனாலும் இப்போ என்னால்
மணிக் கூடின்றி
மின்குமிழ்கள் இன்றி
சகலதையும்
அனுமானிக்க முடிவதோடு
அத்தனை அழகையும்
ரசிக்கவும் முடிகிறதே..!!

எத்தனை அழகாய்
வெள்ளை மலைத்தொடர்களும்.
அதற் கூடே ஒளிரும்
வெண்மையும்
அந்த ஒளித்தெறிப்பின்
யவ்வனமும்.

வெறும் உடம்போடு
பனிக்கால சுகத்தை
அனுவணுவாய்
ரசித்து கிறங்கி போயிருக்கும்
இயற்கையும்..

ஒரு மரக்கிளையில்
குளிரில் நடங்கியபடி
எங்கோ பார்த்திருக்கும்
ஒற்றைக் குருவி.

பாவம்..!!
இதற்கும்
தலைசாய்து கொள்ள
ஒரு மடி கிடைத்து விட்டால்
என்னைப்போல இத்தனை அழகையும்
இன்பமாய் ரசிக்குமோ.?

நளாயினி தாமரைச்செல்வன்.

Friday, November 25, 2005

அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.



சர்வதேச பெண்கள் வேலை சுகாதாரம் தொடர்பான நான்காவது சர்வதேச கருத்தரங்கில் பங்கு பற்றச்செல்லும் கவிiஐ வைகைச்செல்விக்கு உலகபெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் புலம்பெயர்ந்த ஒட்டுமொத்த பெண்கள் சார்பாகவும் போர்ச்சூழலால் தத்தமது நாட்டில் இருந்து துன்புறும் பெண்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

அவரின் குரல் போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட, சுனாமியால் பாதிக்கப்பட்ட, பூகம்ப அதிர்வுகளால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த பெண்கள் குரலாய் ஒலிக்கட்டும் . இலங்கைத் தீவின் அழுகுரலுக்கு நம்பிக்கை தருவார் என நம்புவோம். அவரின் குரல் உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கட்டும்.

எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.

Wednesday, November 23, 2005

புத்தகத்தொகுதிகளிற்கான என்னுரை.

நங்கூரம் கவிதைத்தொகுதி பலவகையான காதலை சொல்லிச்செல்கிறது. காதல் மொழிகள் கூட ஆண்களுக்கே உரியதாக . அவர்களால் மட்டுமே உச்சரிக்கும் வாசகங்களாக. அதனை மாற்றும் பயனாகவே எனது காதல் கவிதைகள் ஆரம்பமானது எனலாம்.

அதில் ஒருதலைக்காதல், இருதலைக்காதல், பெற்றோரால் பிரிந்து போயிருக்கும் காதல், ஏமாற்றுக்காதல், இன மத பேதங்களால் பிரிந்து நிற்கும் காதல், மொழியால் இனத்தால் பிரிந்த நிற்கும் காதல், மனதுள் மட்டுமே பூத்துவிட்டு உதிர்ந்த காதல், எனது கணவரை எப்படி காதலித்தேன் என்பதனைக் கூட எழுதி இருக்கிறேன். இப்படியாக விரிகிறது நங்கூரம்.

ஒவ்வொருவரது காதல் மனநிலையையும் தமிழ்க்கயிறேறி கட்டி இழுத்து வந்து கவிதையாக்கி உள்ளேன் .

மொத்தம் 31 கவிதைகள் அதில் உள்ளன. இந்த புலம்பெயர்வாழ்வும் அதிக வேலைப்பழுவும் தனிமையும் என்னை நங்கூரத்தின் தொடர்ச்சியாக உயிர்த்தீ என்பதை எழுதிமுடித்தேன். அதன் நீட்சியாக பூக்கள் பேசிக்கொண்டால் அமைகிறது. அதன் நீட்சியாக உயிர்கொண்டு திளைத்தல் அமைகிறது.

முதலில் நங்கூரத்தையும் உயிர்த்தீயையும் கொண்டு வந்த பின் பூக்கள் பேசினால் என்ற தலைப்பை கொண்டு வரலாம் என நினைக்கிறேன். அதன் பின் உயிர்கொண்டு திளைத்தல் கவித்தொகுதியாகும்.

கவிஉலகுள் நான் பிரவேசித்தது எனது பதினேழு பதினெட்டு வயதில் என நினைக்கிறேன். போராட்ட சூழலும் இடப்பெயர்வும் பதுங்குகுளிவாழ்வும் எனது எழுத்தை தொடரவிடவில்லை.

புலம்பெயர்ந்த பின் எனது கணவரின் ஊக்கமும் எனது தாய்தந்தையரின் ஊக்கமும் எழுதவைத்தது எனலாம்.

பின்னர் வானொலிகள் தொடங்கிய காலம் எனது எழுத்து அதிக உத்வேகமானது என கூறலாம். புலம்பெயர் சகல தமிழ்வானொலிகளிலும் எனது கவிதைகளை பாடி இருக்கிறேன்.

எனது கவிதைகள் யாழ் இணையத்தளம், திண்ணை, திசைகள், பதிவுகள், வார்ப்பு, தமிழமுதம், தமிழ் மன்றம்; ஊடறு,சூரியன் இணையத்தளம் ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.

பதிவேடுகள் என பார்த்தால் சக்தி, ஈழநாடு, வடலி, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர், அவள் விகடன், பூவரசு ஆகியவற்றில் வெளியாகி உள்ளன.

எனது கவிதைகளை வாசித்து அப்பப்போ உற்சாகமும் நிறைகுறைகளை பகிர்ந்து கொண்ட வாசக உள்ளங்களுமே என்னை மேலும் எழுதவைத்தனர் எனலாம். புத்தகத்தொகுதிகள் உங்கள் கை கிடைத்ததும் ஆக்க பூர்வமான விமர்சனங்களை தந்துதவுங்கள்.

என்றும் எழுத்துலக நட்புடன்
நளாயினி தாமரைச்செல்வன்.

Tuesday, November 22, 2005

நங்கூரம் ;உயிர்த்தீ ஆகிய கவிதைத்தொகுதி வெளியீடு.

தைத்திங்கள் 2006 ல் எனது கவிதைத் தொகுப்பான நங்கூரம்;, உயிர்த்தீ என்பன வெளிவர உள்ளன. புதுவை இரத்தின துரை அவர்கள் வந்த போது புலம்பெயர் புத்தகங்கள் தமது கைக்கு கிடைப்பதில்லை என கூறியபோது பலரது புத்தகங்களை எடுத்து கொடுத்திருந்தேன். அந்த வகையில் சில புத்தகங்களை சேர்த்துக் கொடுத்திருந்தேன். அந்த வகையில் கருணாகரமூர்த்தி எனக்கு எழுத்துலகத்தோடு பழக்கமானார். திரு கருணாகர மூர்த்தி மனுஸ்யபுத்திரனை போன ஆண்டு மின்னஞ்சலுக்கூடாக அறிமுகம் செய்து வைத்தார். போன ஆண்டே வரவேண்டிய புத்தகம் எனது வேலைப்பழுக்களால் வெளியாகாமல் போய் விட்டது. இப்போது ஆயத்தங்கள் மனுஸ்யபுத்திரனால் நடைபெற்றுவருகிறது. வருகிற ஆண்டு தை மாதம் புத்தக கண்காட்சியில் எனது கவிதைத்தொகுதிகள் இரண்டு வர உள்ளதை மகிழ்வுடன் எழுத்தலக நெஞ்சங்களிற்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஓவியர் ஐPவன் அவர்களது அட்டப்படத்துடன்.

எழுத்தலக நட்புடன்
நளாயினி தாமரைச்சென்வன்.

Monday, November 21, 2005

நங்கூரம்.(2)

நட்பாய் எனக்கொரு நகல் எழுதேன்.
______________________________________________

சமூகத்தின்
வெறித்தனத்திற்கெல்லாம்
சாவு மணி அடிக்க
ஏன் தயங்கினோம்.?

உணர்வில் உயிரில்
கலந்த பின்
பிரிந்தோம் என்பது
வேதனை தான்.

மரணித்து
காதலை வளர்ப்போம்
என்றோம்.

எனக்குள் இருக்கும் நீயும்
உனக்குள் இருக்கும் நானும்
வாழ்ந்து கொண்டே
நினைவுகளில் வாழ்வோம்
என்கின்றனர்.

நீ தந்த சின்னச்சின்ன
பரிசுப்பொருளெல்லாம்
இன்றும் என்
தலை அணையின் கீழ்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

உன்னை எல்லாம் இப்போ என்
தொலை பேசி விசாரிக்கத்தவறுவதில்லை.
நமக்கு வயதாவது போல்
சமூக வெறிக்கும் வயதாகாதா என்ன?
புதிதாயல்லவா பிறப்பெடுக்கிறது.

சமூகம் திருந்தாது.
நாம் தான் மாற வேண்டும்.
காலம் போகிறது வயதும் போகிறது
வாயேன் ஓடிப்போய்
மாலை மாற்றுவோம்.

என் நாடி அடங்கு முன்
உனை ஒரு முறை
பார்த்திட வேண்டும்.
எங்கே இருக்கிறாய்.?

நட்பாய்
எனக்கொரு
நகல் எழுதேன்.

Friday, November 18, 2005

உயிர்த்தீ......4

நீர்த்தடாகத்துள்
விழும் மழைத்துளியாய்
கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன்.

சின்ன சின்ன
குமிழ்களாய்
தோன்றுவதும்
மறைவதுமாய்--

இப்படித்தான்
உன் நினைவுகள்
எனக்குள் இப்போ.

கண் மூடி கிறங்கி
சலசலப்பை உணர
சுகமாகத்தான் உள்ளது.

குமிழ்கள் உடையும்போது
ஏற்படும் நீர்ச்சலனம்
மெது மெதுவாக
எங்கும் வியாபித்து
தடாகத்துள் அலை போன்ற
அசைவைத்தருவது போல்
உயிரின் அந்தம் வரை நீயும்
அதிர்வை தரத்தான் செய்கிறாய்.

Wednesday, November 16, 2005

நங்கூரம். (1)

அந்த புகை வண்டியில்
நட்பாய் ஓர் கரம்.

என் பிரயாண சுமைகளை இறக்கி
என் குழந்தையையும்
தன் மடியில் வைத்துக்கொண்டான்.

அருகில் சிரித்த முகத்துடன்
அவன் மனைவி.

எனக்கு அவளை அறிமுகப்படுத்தி விட்டு
தன்னை அறிமுகப்படுத்தாமல்.

நான் எனக்குள்
இவன் கண்களை எங்கோ பார்த்ததாய் ..!
நன்கு பரீட்சயமானதாய் !
யார் இவன்?
நிறைய உரு மாறி இருப்பானோ?

என்னை நன்கு தெரிந்தவனாய்
எல்லாம் விசாரித்தான்.

மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்?

ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.

அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப்பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற

அயல்வீட்டு சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.

இவனுக்கு மண்ணில்
சோறு கறி சமைத்து
சிரட்டையில்
உணவு கொடுத்தேன்
எனது ஐந்து வயதில்.


நளாயினி தாமரைச்செல்வன்.

Sunday, November 06, 2005
















மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி

நளாயினி தாமரைச்செல்வன்.
29-09-2003

Friday, November 04, 2005

தேசியப் பண் எனது பார்வை.

சொல்லிக் கருக்கட்டவதில்லை கவிதை. அணுவணுவாக மனசு வதைத்து, பிழிந்து, உய்த்து, தொலைந்து, உயிர்த்து, கனத்து, உயிர்த்து, ததும்பி, வழிந்து, ஓடுவது தான் கவிதை.

அதுகும் இங்கே மிடுக்கோடு துள்ளல் நடையோடு உயர் விச்சோடு என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். கவிதை வரும் அத்தனை தன்மைகளோடு நாம் இது வரை அனுபவித்து எழுதி இராத வெற்றி வாகை இதுவரை சொல்லப்பட்டிராத மீடுக்குடன் என நான் நினைக்கிறேன் வீர ஆவேசம் பொங்கிய மகிழ்வை கூறும் கவிதையாக வரல் வேண்டுமென. அதை நினைத்ததும் எழுத முடியாது.

மிடுக்குடன் துள்ளல் நடையுடன் உயர் வீச்சுடன் என கூறுகிறபோது புலம்பெயர் மண்ணில் வாழும் என்னால் காத்தவராயன் கூத்தம் சூரன் போருமே மனக்கண் முன் வருகிறது.

அத்தனை போராட்டங்களிலும் அருகே இருந்தவர்களால் மட்டுமே இந்த பண்ணை உருவாக்க முடியும்.

நொந்து வெந்து வீழ்ந்து துவண்டு துடித்து அழுது புலம்பி அரற்றி ஆசவாசமாய் சமாதானமாகி இனியும் நாம் வீழ்ந்து போகக் கூடாது என நினைத்து திடீர் என எழும்பி மிடுக்குடன் துள்ளல் நடையுடன் வீர ஆவேசம் பொங்க நின்ற அனுபவம் உடையவர்களால் மட்டுமே துள்ளல் நடையுடன் வீறுகொண்ட உயர் வீச்சுடன் எழுதமுடியும். அது தான் உண்மை.

அத்தகைய தன்மை அனைத்து போராட்டங்களின் வெற்றி தோல்வி மரண ஓலம் ஒப்பாரி இவற்றிற்கு அருகிலிருந்தவர்களாலேயே எழுதமுடியும்.

எனது பார்வை முடிந்த முடிபல்ல.புலம்பெயர் தமிழர் யாராவது எழுதினாலும் எழுதிவிடலாம்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Wednesday, November 02, 2005

உயிர்த்தீ......3

மனசு
அதெப்படி இருக்கும்?!
ஆராய்ச்சி ஏதும்
இதுவரை செய்ததில்லை.

ஆனாலும் நான்
ஒரு போதுமே
அதை எடுத்து
தொட்டுப் பார்த்ததுமில்லை
உணர்ந்து
படித்ததுமில்லை.

எங்காவது தன்னை மறைத்தபடி
இந்த உடம்புள்
எந்த இடுக்குகளுக்குள்
இதுவரை இருந்திருக்கும்.!!!

இப்போதாவது
கண்டெடுத்தேனே!!

காமக்கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையம்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி.

நட்பா..!? காதலா..!?
பிரித்துப்பார்க்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டும்.

இப்போவதாவது கண்டு பிடித்தேனே
எந்தன் மனைசை உந்தன் நினைவுகளோடு.

நளாயினி தாமரைச்செல்வன்.